கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகளைப் பார்வையிட அம்மாநில ஆளுநருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களின்போது 14 பேர் பலியாகினர். இதுகுறித்து பாஜக புகார் எழுப்பியிருந்தது.
இந்நிலையில் வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிடப் போவதாக ஆளுநர் ஜக்தீப் தாங்கர் அறிவித்தார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இதுவரை இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டதில்லை என்றும் இந்த வழக்கம் இதற்கு முன்பு இல்லை என்றும் அக்கட்சி எம்பி கல்யாண் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் அமைதியைச் சீர்குலைப்பதுதான் ஆளுநரின் நோக்கமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் ஜக்தீப் தாங்கருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ஆளுநர் எடுத்துள்ள தன்னிச்சையான முடிவானது நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் மரபுகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.
எனவே, விதிமுறைகளுக்குப் புறம்பாக செயல்படுவதையும் கள ஆய்வு தொடர்பாக திடீர் முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் வலியுறுத்தி உள்ளார்.

