மும்பை: கறுப்புப் பூஞ்சை நோய்த்தாக்கத்தால் மகாராஷ்டிராவில் 52 பேர் பலியாகி உள்ளதாக தினத்தந்தி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கறுப்புப் பூஞ்சை நோய் குறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை என்றும் அதிலிருந்து விரைவில் குணமடைய முடியும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோருக்கும் குணமடைந்தவர்களுக்கும் கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
சிகிச்சையின்போது உட்கொள்ளும் சில மருந்துகளால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து இந்தப் பூஞ்சை நோய் தாக்கம் ஏற்படுவதாக சிலர் கூறுகின்றனர். மகாராஷ்டிராவில்தான் பூஞ்சை நோயால் தாக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளான நிலையில் 52 பேர் நோய்க்குப் பலியாகி விட்டனர்.
இதற்கிடையே நாடு முழுவதும் நேற்று முன்தினம் புதிதாக 326,098 பேருக்கு கிருமி தொற்றியது. 3,890 பேர் பலியாகிவிட்டனர். 36,73,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் புதிதாக 45,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

