புதுடெல்லி: கஜகஸ்தான் நாட்டிலிருந்து 750,000 சுவாசக் கருவிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அவை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கட்டான வேளையில் 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. அவற்றுள் மத்திய ஆசிய நாடுகளுள் ஒன்றான கஜகஸ்தானும் அடங்கும்.
அந்நாடு ஏற்கெனவே இந்தியாவுக்கு 5.6 மில்லியன் சுவாசக் கருவிகளை அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் 750,000 சுவாசக் கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளது.
தவிர 105 வென்டிலேட்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'ரெஸ்பிரேட்டர்' எனப்படும் சுவாசக் கருவிகள் கொரோனா சிகிச்சைக்கு கைகொடுக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே உயிர்வாயு உற்பத்திக்கூட ஒதுக்கீட்டில் நியாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிஉள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு உயிர்வாயு உற்பத்திக் கூடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயங்குவது வெளிப்படையாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இது தொடர்பான முன்னுரிமை மாற்றி அமைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்துக்கான ஒதுக்கீடு நாளுக்கு நாள் குறைக்கப்படுகிறது. எனவே, இதுதொடர்பான நடவடிக்கைகளில் அனைத்து மட்டத்திலும் நியாயமும் வேகமும் வேண்டும்," என்று மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

