புதுடெல்லி: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அழுத்தத்துக்கு ஆளாகாமல் உண்மை நிலவரத்தை மாநில அரசுகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
இதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கிராமப்புறங்களில் வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி உண்மை நிலவரத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் பிரதமர் மோடி ஆலோசனை வழங்கி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா கிருமித்தொற்றால் நாள்தோறும் சராசரியாக 400,000 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கிராமப்புறங்களுக்கும் தொற்று பரவியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பல்வேறு அமைச்சுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டியது இந்த நேரத்தின் தேவை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாக 'தினத்தந்தி' நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், கிராமப்புறங்களில் தொற்றுப் பரவுவது கவலை தருகிறது என்றார்.
"கிராமங்களில் வீடு வீடாக சோதனை நடத்துவதுடன் தீவிர கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட வேண்டும்," என்றார் பிரதமர் மோடி.
கிராமப்புறங்களில் தத்தம் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவது தொடர்பாக விளக்கப் படங்களுடன் எளிதான மொழியில் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் மத்திய அரசு வழங்கிய செயற்கை சுவாசக் கருவிகளை (வென்டிலேட்டர்) சில மாநிலங்கள் சரிவர பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவலின் பேரில் அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
"கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் நீடிக்கிறது. இது விஞ்ஞானிகளாலும் துறை வல்லுநர்களாலும் வழிநடத்தப்படுகிறது. இந்தப் போராட்டம் தொடரும்," என்றார் பிரதமர் மோடி.
'கொரோனாவுக்கு எதிரான போரை விஞ்ஞானிகள், துறை வல்லுநர்கள் வழிநடத்துகிறார்கள்'

