புதிதாக 281,386 பேருக்குக் கிருமித்தொற்று; பொடி வடிவில் தடுப்பு மருந்து அறிமுகம்
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முந்நூறாயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதிக்குப் பிறகு முதன்முறையாக தொற்று எண்ணிக்கை இவ்வாறு குறைந்துள்ளது.
அண்மைய சில தினங்களாகவே நாடு முழுவதும் கொரோனா கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 400,000க்கும் அதிகமாகப் பதிவாகி வந்தது. மேலும் நாள்தோறும் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 281,386ஆக குறைந்தது. எனினும் மாண்டோர் எண்ணிக்கை 4,106ஆகப் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் கிராமப்புறங்களில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கிராம அளவிலான கண்காணிப்பு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் கலந்தாலோசித்து சிகிச்சை அளித்தல், பரிசோதனைகள் செய்வதற்கான பயிற்சி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் ஊரகப் பகுதிகளில் தொற்று பரவாமல் இருக்க, ஆரம்ப சுகாதார உள்கட்டமைப்புகள் தயாராக உள்ளனவா என்பதை உறுதி செய்யும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பொடி வடிவ கொரோனா மருந்து இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா கிருமிக்கு எதிராக இந்த மருந்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது நிரூபிக்கப்பட்டதை அடுத்து விற்பனைக்கு வருகிறது.
பொடி வடிவில் இருப்பதால் இம்மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். முதற்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வரும் என்றும் உயிர்வாயு உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் விரைவில் தொற்றில் இருந்து மீள இம்மருந்து கைகொடுக்கும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

