புதுடெல்லி: கங்கையில் மனித உடல்கள் வீசப்படுவதைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மைய சில தினங்களாக கங்கை நதியில் நிறைய உடல்கள் மிதந்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
கொரோனா கிருமித்தொற்றால் பலியானவர்களின் உடல்கள் இவ்வாறு கங்கையில் வீசப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதனால் தொற்றுப்பரவல் அதிகரிக்கும் என்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கங்கை நதியில் உடல்கள் வீசப்படுவது விரும்பத்தகாத, ஆபத்தான செயல் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உயரதிகாரிகள் பங்கேற்ற இரு ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து கங்கை நதியில் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்றும் இறந்தவர்களின் உடல்களை உரிய விதத்தில் அகற்ற வேண்டும் என்றும் மத்திய அரசின் ஜலசக்தி அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் கைப்பற்றப்படும் உடல்களை கண்ணியமான முறையில் தகனம் செய்வதற்கு உதவ வேண்டும் என்றும் மத்திய அரசு இரு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

