புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று மீண்டும் குறைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கி உள்ளன.
நேற்று முன்தினம் 263,533 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வரை அன்றாடம் பதிவாகும் தொற்று எண்ணிக்கை 400,000க்கும் மேல் பதிவாகி வந்தது. இப்போது முந்நூறு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிறது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 3.53 மில்லியன் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 422,436 பேர் குணமடைந்துள்ளனர். எனினும் மரண எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.
நேற்று முன்தினம் மட்டும் 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் நிபுணர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, சில மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் தொற்று பாதிப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு அங்கு 31 ஆயிரம் பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது. எனினும் நேற்று முன்தினம் 38 ஆயிரம் புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ஒரே நாளில் 476 பேர் மாண்டுவிட்டனர்.
ஒடிசாவில் இன்று முதல் ஜூன் 1 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்களைவிட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அங்கு 11,597 பேர் பாதிக்கப்பட்டனர். அதே சமயம் 29,549 பேர் குணமடைந்துள்ளனர்.
தெலுங்கானாவிலும் நேற்று முன்தினம் புதிதாக 3,961 பேருக்கு கிருமி தொற்றிய நிலையில், 5,559 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவதை அடுத்து அங்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக 'டெக்கான் கிரானிக்கல்' நாளேட்டின் செய்தி தெரிவிக்கிறது.

