புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து கட்டுக்கதைகளுக்கும் எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடினமான சூழலுக்கு இடையிலும் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி வரும் அதிகாரிகள்தான் போர் தளபதிகள் என்று அவர் குறிப்பிட்டார்.
"'நாம் ஊரகப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான சவால்கள் உள்ளன," என்றார் பிரதமர் மோடி.
முன்னதாக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் காணொளி வசதி மூலம் கலந்துரையாடிய அவர், மருத்துவர்களின் கொரோனா கால அனுபவங்களைக் கேட்டறிந்தார். அப்போது, கரும் பூஞ்சை தாக்கத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

