ஒடிசாவில் இரவு ஊரடங்கு: நாடு முழுவதும் 1,118 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலி
புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஆறு நாள்களாக குறைந்துள்ளது. எனினும் சில மாநிலங்களில் மீண்டும் கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது.
மேலும் சில மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகும் எதிர்பார்த்த அளவுக்கு தொற்றுப்பரவல் குறையவில்லை.
இந்நிலையில் மரண எண்ணிக்கையில் டெல்லியை விஞ்சியது கர்நாடகா. கடந்த 17 நாள்களில் மட்டும் கர்நாடகாவில் 6,790 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
இதன்மூலம் மரண எண்ணிக்கை பட்டியலில் அம்மாநிலம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
முதல் இடத்திலுள்ள மகாராஷ்டிராவில் 82,486 பேரும் கர்நாடகாவில் 22,313 பேரும் டெல்லியில் 21,846 பேரும் தமிழகத்தில் 18 ஆயிரம் பேரும் உத்தரப் பிரதேசத்தில் 17,817 பேரும் பலியாகிவிட்டனர்.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 28 ஆயிரம் பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது.
தலைநகர் மும்பையில் பத்து வாரங்களில் இல்லாத அளவுக்கு அன்றாடம் பதிவாகும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 953ஆக குறைந்துள்ளது.
கேரளாவில் நேற்று முன்தினம் 31,337 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது. ஒரே நாளில் 97 பேர் பலியாகிவிட்டனர்.
அம்மாநிலத்தில் இதுவரை 6,612 பேர் உயிரிழந்துவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 347,626 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் தொற்றுப்பரவல் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனத் தெரிகிறது.
ஒடிசாவில் நேற்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே டெல்லி சிறையில் கைதிகளுக்கு மத்தியில் தொற்றுப்பரவல் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக 18 முதல் 44 வயதுக்குட்பட்ட கைதிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.
டெல்லியில் உள்ள மூன்று சிறைகளிலும் ஏற்கெனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து இதுவரை 1,472 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மூன்று சிறைகளிலும் சுமார் 19,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் 1,118 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவக் கழகத் தலைவர் ஜெயலால் கூறியுள்ளார்.

