கோல்கத்தா: லஞ்ச வழக்கில் தொடர்புடைய பாஜக எம்பி சுவேந்து அதிகாரியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. அவருடன் சேர்த்து மேலும் மூவர் விசாரிக்கப்பட உள்ளனர்.
சுவேந்து அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவரை விசாரிக்கவோ, கைது செய்யவோ மக்களவை சபாநாயகரின் அனுமதி தேவை. இதையடுத்து அதற்கான நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொண்டுள்ளது.
ஊடகவியலாளர் ஒருவர் தம்மை தொழிலதிபராக அறிமுகப்படுத்திக்கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுத்தார். பின்னர் இந்த லஞ்சம் அளிக்கும் படலத்தை அவர் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.
இந்த விவகாரத்தில் சுவேந்து அதிகாரியும் சிக்கியுள்ளார். எனினும் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், பாஜகவில் இணைந்தார். மேலும் அண்மையில் நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவால் களமிறக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநில அமைச்சர்கள் இருவர் உட்பட நான்கு பேரை சிபிஐ அண்மையில் கைது செய்துள்ளது. இதற்கு முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனினும், சுவேந்து அதிகாரி கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில் அவரைக் கைது செய்ய மக்களவைத் தலைவரின் அனுமதி தேவை என்றும் அதற்காக காத்திருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஊழல் வழக்கு தொடர்பில் தங்கள் கட்சியைச் சேர்ந்த மேலும் சில மக்கள் பிரதிநிதிகளுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் சிபிஐ குறிவைத்துள்ளது என்றும் கட்சி மாறி தற்போது பாஜகவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மம்தா கட்சியைச் சேர்ந்தவர்கள் சாடுகின்றனர்.
மேலும், மேற்குவங்க தேர்தல் தோல்வியால் மத்தியில் உள்ள பாஜக அரசு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரைப் பழிவாங்குவதாகவும் முதல்வர் மம்தாவின் ஆதரவாளர்கள் சாடியுள்ளனர்.

