மும்பை: மகாராஷ்டிராவில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க போதுமான உயிர்வாயு இருப்பதை அரசு உறுதி செய்யும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தினமும் மூவாயிரம் மெட்ரிக் டன் உயிர்வாயுவை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுவதாக அவர் சீரடி பொது மருத்துவமனையில் உயிர்வாயு உற்பத்தி மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசும்போது குறிப்பிட்டார்.
கொரோனா இரண்டாவது அலை மகாராஷ்டிராவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டதாக குறிப்பிட்ட அவர், இந்த அலையைச் சமாளிப்பதற்கு உயிர்வாயு தங்குதடையின்றி கிடைக்கவேண்டியது அவசியம் என்றார்.
"கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்கொண்டு சமாளிக்க திறம்பட செயல்பட வேண்டும். அதற்கு உயிர்வாயு உற்பத்தி அதிகரிப்பது அவசியம்.
"மகாராஷ்டிராவில் தினந்தோறும் மூவாயிரம் மெட்ரிக் டன் மருத்துவ உயிர்வாயுவை உற்பத்தி செய்வதே தற்போது நல்ல தீர்வாக அமையும்.
"அதற்கேற்ப இலக்கு நிர்ணயித்து மகாராஷ்டிர அரசு செயல்பட்டு வருகிறது," என்று முதல்வர் உத்தவ் தாக்கரே மேலும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இப்போது தொற்று பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது.

