புதுடெல்லி: கறுப்பு பூஞ்சை நோயால் தாக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவைப்படும் மருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க 'அம்ஃபோடெரிசின்-பி' என்ற மருந்து கைகொடுப்பதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
இக்குறிப்பிட்ட மருந்துக்கு நிலவும் தேவை, அதன் விநியோக நிலை குறித்து அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இம்மருந்தின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு திட்டம் வகுத்திருப்பதாகவும் பல்வேறு நாடுகளில் இருந்து மருந்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது மருந்துக்கான தேவை திடீரென பல மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில் விநியோகமும் பலமடங்கு உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
'அம்ஃபோடெரிசின்-பி' மருந்தை முறையாக வழங்கவும் விநியோக சங்கிலி மேலாண்மையை மேம்படுத்தவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், பற்றாக்குறை என்ற நிலை விரைவில் மாறும் என்றார்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நேர்மையான வழியில் இம்மருந்து பயன்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.

