மும்பை: 'டவ்தே' புயல் குஜராத்தில் கரையைக் கடந்துள்ள நிலையில் அது வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் தாக்கத்தால் மரண எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களைக் காணவில்லை.
இதற்கிடையே புயல் காரணமாக மும்பை அருகே அரபிக் கடலில் இரண்டு படகுகளில் தத்தளித்த 317 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 390 பேரை தேடும் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக மும்பை கடற்பகுதியில் இரண்டு கப்பல்கள் மட்டுமே புயலில் சிக்கித் தத்தளிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் நான்கு கப்பல்கள் புயலில் சிக்கிக் கொண்டதாகவும் அவற்றில் 707 பேர் இருந்ததாகவும் தெரியவந்தது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே நடுக்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இத்தகவலை மேற்கு கடற்படை உறுதி செய்துள்ளது.
திங்கள்கிழமையன்று மும்பை கடற்பகுதியில் நங்கூரமிட்டு நின்றிருந்த அந்தக் கப்பல் புயலின் தாக்கத்தால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அது கடலில் மூழ்கியது.
குஜராத்தில் 'டவ்தே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.
குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு மேற்கொண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர் புயல் பாதிப்பு குறித்து குஜராத் முதல்வருடன் கலந்தாலோசித்தார் பிரதமர் மோடி.
இதையடுத்து அம்மாநிலத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று அவர் உறுதியளித்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

