அகமதாபாத்: அரபிக்கடலில் உருவான 'டவ்தே' புயல், கடந்த திங்கள்கிழமை இரவில் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடந்தது. அப்போது அது அந்த மாநிலத்தின் கடலோரப்பகுதிகளில் கடுமையான சேதத்தை உண்டுபண்ணியுள்ளது.
அங்கு 16,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 40,000 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 70,000 மின்கம்பங்களும் சாய்ந்தன.
மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு 5,951 கிராமங்கள் இருளில் மூழ்கின. சாலைகள் உருக்குலைந்து போனதால் சாலைப்போக்கு வரத்து முற்றிலும் தடைபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இதுவரை இல்லாதவகையில் இந்தப்புயல் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
சௌராஷ்டிரா பகுதியில் இருந்து வடக்கு குஜராத் வரையில் 46 தாலுகாக்களில் 100 மி.மீ. மழை கொட்டியது. 13 பேர் புயல், மழை, வெள்ளத்தில் பலியானார்கள். இது அந்த மாநிலத்தைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் குஜராத்தின் பாவ் நகருக்குச் சென்றார். அங்கிருந்து அவர், ஹெலிகாப்டர் மூலம் புயலால் பெரும் சேதம் அடைந்த கிர்-சோம்நாத், பாவ்நகர், அம்ரேலி, உனா, டையு யூனியன் பிரதேசம், ஜபாராபாத், மகுவா உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாநில முதல்வர் விஜய் ரூபானி உடன் இருந்தார்.
இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "டவ்தே புயல் பாதிப்புக்குள்ளான குஜராத் மற்றும் டையு பகுதிகள் வான்வழியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புயல் பாதித்த அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு அணுக்கமாக இணைந்து செயலாற்றி வருகிறது," என குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து அகமதாபாத்துக்கு வந்த பிரதமர் ேமாடி அங்கு உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக்கூட்டி ஆய்வு நடத்தினார்.
விமான நிலையத்தில் உள்ள குஜ்சைல் வளாகத்தில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் ரூபானி, மாநில அரசு தலைமைச்செயலாளர் அனில் முகிம், கூடுதல் தலைமைச்செயலாளர் (வருவாய்) பங்கஜ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.
அப்போது பிரதமர் ேமாடியிடம் புயல் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
ஆய்வுக்கூட்டத்தையடுத்து குஜராத்தில் புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
புயல் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மகாராஷ்டிராவில் பிரதமர் ஆய்வு மேற்கொள்ளாதது ஏன்?
பிரதமர் மோடி, புயலால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலப் பகுதிகளைப் பார்வையிடாதது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-
"பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மற்றும் டாமன் டையு பகுதிகளில் சுற்றிச் சுழன்று புயலுக்குப் பின் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
"ஆனால், அதே நேரம் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் எட்டிக்கூட பார்க்க மறுப்பது ஏன்? இது தெளிவான பாகுபாடு அல்லவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

