போபால்: முகக் கவசம் அணியாததால் ஒரு பெண்ணின் தலைமுடியைப் பிடித்து, தரதரவென இழுத்து தாக்கும் போலிசாரின் இந்தச் செயலை அம்பலப்படுத்தும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தொற்று அதிகமாக பாதித்த மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சாகர் மாவட்டத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதிகளில் போலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் தன்னுடைய மகளுடன், கடைக்குச் சென்றுள்ளார். கடைகளை சீக்கிரம் அடைத்து விடுவார்கள் என்பதற்காக, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கச் சென்றுள்ளார்.
ஆனால், அவர் முகக்கவசம் அணியாமல் சென்றதைக் கவனித்த போலிஸ்காரர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பிறகு, தங்களின் போலிஸ் வாகனத்தில் ஏறுமாறும் சொல்லி உள்ளனர். ஆனால், அந்த பெண்ணோ, போலிஸ் வாகனத்தில் ஏற மறுத்துள்ளார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த போலிசார், அவரது தலைமுடியைப் பிடித்து, தரதரவென இழுத்து வந்து மறுபடியும் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

