புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று கிருமித் தொற்று நிலவரம் குறித்து வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், முன்களப்பணியாளர்களிடம் காெணாளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரதமர் கண்கலங்கியதாக தினத்தந்தி வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
"கொரோனா தொற்றின் 2வது அலையில் நாம் பல்முனைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அலையில் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது.
"அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது," என்று கூறிய திரு மோடி, இந்த கொரோனா தொற்றின் 2வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என்று கண்கலங்கியபடி கூறினார்.
கொரோனாவால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
"கொரோனாவிற்கு எதிரான நமது தற்போதைய போரில், கறுப்புப் பூஞ்சை என்ற நெருக்கடியும் சேர்ந்துள்ளது. அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
"இது நாம் பதற்றப்பட வேண்டிய தருணமல்ல. நாம் மிக நீண்ட அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளை பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும்," என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

