தடுப்பூசி போட்டுக்கொண்ட
120 வயது மூதாட்டிக்கு கௌரவம்
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் உதம்பூர் மாவட்டம் கதியாஸ் என்ற கிராமத்தை சேர்ந்த தோலி தேவி என்ற மூதாட்டிக்கு 120 வயதாகிறது. இந்தத் தள்ளாத வயதிலும் சுறுசுறுப்புடன்
இருக்கும் அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசி போட்டதால் தனக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் வரவில்லை என்றும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த மூதாட்டி உற்சாகமாகக் கூறினார். மூதாட்டியின் செயலால் கவரப்பட்ட வடக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி மற்றும் ராணுவ
அதிகாரிகள் தோலி தேவி பாட்டியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று கிராம மக்கள் முன்னிலையில் அவரை கௌரவித்தனர். முதலில் தயக்கம் காட்டிய கிராம மக்களில் பலரும்
தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
'கொரோனா லேகியம்' வாங்க
ஒரே இடத்தில் கூடிய 40,000 பேர்
நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த முத்துக்கூறு தாலுகாவைச் சேர்ந்த கிருஷ்ணாபுரம் என்னும் கிராமப்
பகுதியில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆறு வகையான ஆயுர்வேத லேகியம் தயார் செய்து இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த லேகியம் சாப்பிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்ததாகவும் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் பரவின. இதனால் இந்தக் கிராமத்தில் நாளுக்கு நாள் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் கிருஷ்ணாபுரம் கிராமத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் காலியாகக் காணப்பட்டன. நேற்று முன்தினம் 40,000 பேர் ஒரே இடத்தில் கூடியதால் கொரோனா பரவும் ஆபத்து உரு வானதாலும் லேகியத்தின் செயல்பாடுகள் தெரியாததாலும் லேகியம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டது.
'இந்திய வகை கிருமி' பதிவுகளை நீக்க மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B1617 கொரோனா கிருமியை புதிய வகை என்று மட்டுமே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பெயரை சேர்த்து வெளியான பதிவுகளை நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சமூக ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு இத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், 'இந்திய வகை கிருமி' என்று குறிப்பிடுவதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இந்தப் பெயரில் உள்ள பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க வேண்டும். உருமாறிய கொரோனா கிருமியை இந்தியாவின் பெயரை இணைத்து குறிப்பிடுவது முற்றிலும் தவறானது," என்று கூறப்பட்டுள்ளது.

