புதுடெல்லி: இந்தியாவும் ரஷ்யாவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கூட்டாக 8.5 கோடி 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளன.
இதற்கான உற்பத்தி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார். தற்போது 2 லட்சம் முறை போடக்கூடிய தடுப்பூசி மருந்துகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இந்தத் தகவலை தினமலர் வெளியிட்டுள்ளது.
"இந்தியாவுக்கு ஏற்கெனவே 2.1 லட்சம் முறை போடக்கூடிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. மே மாத இறுதிக்குள் 30 லட்சம் முறை போடக்கூடிய தடுப்பூசிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜூன் மாதம் 50 லட்சம் குப்பிகள் அனுப்பி வைக்கப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிலே தடுப்பூசி உற்பத்தி தொடங்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்தியாவில் 'ஸ்புட்னிக் வி' விநியோகம் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். முதலாவதாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும்.
"இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 2வது தடுப்பூசி மூலப்பொருள் அதிக அளவு இந்தியாவுக்கு அனுப்பப்படும். இவை உடனடியாக பயன்படுத்தும் வகையில் இருக்கும். மூன்றாவது, 'ஸ்புட்னிக்' மருந்து தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்திய நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு அந்நிறுவனம் இந்த மருந்தை உற்பத்தி செய்யும்.
"மூன்று கட்டங்களிலும் ஒட்டு மொத்தமாக 8.5 கோடி தடுப்பூசிகள் இந்தியாவுக்குக் கிடைக்கும்," என்று மேலும் அவர் கூறினார்.
ஒரு முறை போடக்கூடிய 'ஸ்புட்னிக் லைட்' மருந்துக்கு இந்திய அரசு முறைப்படி அனுமதி வழங்கும் போது உற்பத்திக்கான கூட்டு முயற்சி தொடங்கும் என்றார் அவர்.
`ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி மருந்து 79.4 விழுக்காடு நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.
இது ஒரு முறை போட்டுக்கொண்டால் போதுமானது.
இரண்டு முறை தடுப்பூசி போடுவதன் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புத் திறனைவிட ஒரு முறை போடக்கூடிய `ஸ்புட்னிக் லைட்' மருந்து சிறந்தது என்று பாலா வெங்கடேஷ் தெரிவித்தார். ஏற்கெனவே 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் 'கொவிஷீல்ட்' தடுப்பூசியும் 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசியும் இந்தி யாவில் பயன்படுத்தப்படுகிறது.

