புதுடெல்லி: இந்தியா முழுவதும் 8,800 பேருக்கு மேல் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சில மாநிலங்கள் கருப்புப் பூஞ்சை பாதிப்பை தொற்றுநோயாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,800ஐத் தாண்டியுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மாநில அரசு களுக்கு கூடுதலாக 23,000 மருந்து குப்பிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே தமிழகத்தில் சேலம், தஞ்சை, கோவை உள்ளிட்ட வட்டாரங்களிலும் கறுப்பு பூஞ்சை பரவி வருகிறது.
கொரோனா கிருமித்தொற்று ஒரு பக்கம் பொது மக்களை அச்சுறுத்தி வரும் வேளையில் மற்றொரு பக்கம் கறுப்பு பூஞ்சை என்ற புதிய நோய் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே சென்னை, மதுரை உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
கோவை மாவட்டத்தில் மட்டும் ஆறு பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் ஒரு பெண் உள்பட 5 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது ஐந்து பேரும் சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 'வெப்துனியா' இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

