புதுடெல்லி: கறுப்புப் பூஞ்சை நோய் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
கறுப்புப் பூஞ்சை பாதிப்பைத் தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு தற்போது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கறுப்புப் பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நோய் பரவி இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,424 என்பது தெரியவந்துள்ளது.
நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இதுவரை 18 மாநிலங்களில் கறுப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களில் 4,556 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டவர்கள் என்றும் 55 விழுக்காட்டினருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீளும் குழந்தைகளுக்கு 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு பல்லுருப்பு வீக்க நோய் ஏற்படுவதாக மாலைமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து மத்திய மாநில அரசுகளிடமிருந்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் இந்த பரிசோதனைகளை முதலில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

