புதுடெல்லி: வங்கக் கடலில் உருவாகி உள்ள 'யாஸ்' புயல் இன்று அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தப் புயல் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு இடையே நாளை மாலைக்குள் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக அம்மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து யாஸ் புயலால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுடன் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
முதற்கட்டமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம்தான் சில இந்திய மாநிலங்கள் 'டவ்தே' புயலை எதிர்கொண்டன. இப்போது அடுத்த புயல் புதிய மிரட்டலாக உருவெடுத்துள்ளது.
'யாஸ்' புயல் கரையைக் கடக்கும்போது சுமார் 185 கிலோமீட்டர் வேகத்துக்குக் சூறைக்காற்று வீசும் என்றும் மிகத் தீவிரமான கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புயல் பாதிப்பு இருப்பதாகக் கருதப்படும் மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பேரிடர் மீட்புக் குழுவினரும் ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
'டவ்தே' புயலுக்கு 155 பேர் பலியாகியுள்ள நிலையில் இந்தப் புதிய புயலால் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேற்கு வங்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'யாஸ்' புயலால் அண்டை நாடான பங்ளாதேஷிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

