புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மே 26ஆம் தேதியுடன் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
11 கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், மாற்று வழிகளைத் தெரிவித்தால் மட்டுமே விவசாயிகளுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்கிறார் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
புதிய சட்டங்களைத் திரும்பப் பெறும் பட்சத்தில் அவற்றுக்கான மாற்று வழிகள் என்ன என்பதை விவசாயிகள் தெளிவுபடுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் தரப்பில் போராட்டங்கள் மட்டுமே நடப்பதாகவும் இதுவரை மாற்று வழிகள் குறித்து எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

