சென்னை: பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு வேளையிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் நேற்று ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரேஷன் கடைகளைத் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் உணவுப்பொருள், பயனீட்டாளர் பாதுகாப்புத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கொரோனா முதற்கட்ட நிவாரணத் தொகையை இதுவரை பெறாதவர்கள் அதை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரேஷன் கடைகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுச் செல்ல வேண்டுமென பயனீட்டாளர் பாதுகாப்புத் துறை ஆணையர் கூறியுள்ளார்.

