புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் நேற்று கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைந்தன.
இதையடுத்து கறுப்பு தினத்தை அனுசரிக்குமாறு விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி நேற்று கறுப்பு தினத்தை அனுசரித்த விவசாயிகள், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை தங்களுடைய போராட்டம் நீடிக்கும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
காஸிப்பூர், திக்ரி, சிங்கா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நேற்று திரளாகக் கூடி கறுப்புக் கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கும் எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும் சில தலைவர்களின் உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டன.
கறுப்பு தின போராட்டத்தையொட்டி டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போலிசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தன. விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய வாகனங்களிலும் கறுப்புக் கொடிகளைக் கட்டி இருந்தனர்.
"வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ள தலைவர்களின் உருவப் பொம்மைகளை எரித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம். மத்தியில் புதிய அரசு அமைந்து ஏழு ஆண்டுகளாகி விட்டன. விவசாயிகள் ஆறு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
"எனினும் எங்களுடைய கோரிக்கைகளை செவிமடுக்க மத்திய அரசு மறுத்து வருகிறது," என்று மூத்த விவசாயத் தலைவர் அவ்தார்சிங் மெஹ்மா தெரிவித்ததாக 'எக்கனாமிக் டைம்ஸ்' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

