மும்பை: அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றியதால் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமம் கொரோனா பிடியிலிருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளது.
அகமது நகர் மாவட்டத்தில் உள்ள 'போயரேகுர்த்' என்ற அந்தச் சிறிய கிராமத்தில் தற்போது ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை.
இந்தக் கிராமத்தில் 1,500 பேர் வசிக்கின்றனர். கொரோனா தொற்றுப் பரவலால் தொடக்கத்தில் நான்கு பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து கிராமப் பஞ்சாயத்து சார்பில் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத் துறை உதவியுடன் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கிராமக் கோவிலில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காலையிலும் மாலையிலும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
"கிராமத்தில் புதிதாக தனிமைப்படுத்தும் மையத்தை அமைத்துள்ளோம். அறிகுறிகள் உள்ளவர்கள் இம்மையத்தில் தங்க வைக்கப்படுவர். வெளியூர் செல்பவர்கள், வெளியூர்களில் இருந்து வந்து போகிறவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.
"அரசாங்கம் வலியுறுத்தி உள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளையும் முறையாகப் பின்பற்றுகிறோம்," என்கிறார் இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ராஜேந்திர அம்பேத்கர்.

