புதுடெல்லி: எந்தத் தடுப்பூசியும் நூறு விழுக்காடு பாதுகாப்பு அளிக்காது என மத்திய நிதி ஆயோக் சுகாதாரக் குழு உறுப்பினரான மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசிகளை இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்ட பிறகும் 'பூஸ்டர்' ஊசி ஏதேனும் செலுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய 'பூஸ்டர்' ஊசிகள் தேவைப்படும் பட்சத்தில் அதுகுறித்து மக்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஒரு குறிப்பிட்ட தொற்று நோய்க்கு எதிராக அனைவரும் நோயெதிர்ப்பு சக்தியைப் பெறவேண்டியது அவசியம் என்றார்.
"கோவாக்சின் தடுப்பூசியை இருமுறை செலுத்திக்கொண்ட பின்னர் 6 மாதங்கள் காத்திருந்து பூஸ்டர் ஊசியும் போட்டுக்கொள்ள வேண்டுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம்.
எனினும் அதன் முடிவு தெரியும்வரை மத்திய சுகாதார அமைச்சு கூறும் அறிவுரைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
"இருமுறை தடுப்பூசிகளைச் போட்டுக் கொள்வதன் மூலம் தடுப்பூசிக்கு எதிரான போரில் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவோம். எனினும் தடுப்பூசியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்," என்றார் மருத்துவர் வி.கே. பால்.
வரும் ஜூலை மாதத்தில் இருந்து இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறினார்.
ஃபைசர் நிறுவனம் இந்தியாவில் தனது தடுப்பூசியை விநியோகிக்கும் முன்னர் உரிமம் பெறுதல், பதப்படுத்தும் சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று குறிப்பிட்ட அவர் ஃபைசர் நிறுவனம் தங்களுக்குக் காப்பீடுப் பாதுகாப்பு கோரியிருப்பதாகக் கூறினார்.