ராய்ப்பூர்: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் கிடையாது என தமது துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு அதிகாரி உத்தரவிட்டதாக வெளியான தகவல் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் நலத்துறையில் மாவட்ட உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறார் கே.எஸ்.மஸ்ராம். இவர் அண்மையில் பிறப்பித்த உத்தரவுதான் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் அலுவலகங்கள், உறைவிட பள்ளிகள், விடுதிகள் ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளும் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அண்மையில் அறிவித்தார் மஸ்ராம்.
மேலும், ஊசி போட்டுக்கொள்ள தவறும் ஊழியர்களுக்கு அடுத்த மாத ஊதியம் வழங்கப்படமாட்டாது என்றும் அவரது உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. யாரோ இதை சமூக வலைத்தளத்தில் கசியவிட, சர்ச்சை வெடித்தது. அரசு அதிகாரி ஒருவர் எப்படி இவ்வாறு உத்தரவிடலாம் எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், தாம் பிறப்பித்த உத்தரவு குறித்து மஸ்ராம் விளக்கம் அளித்துள்ளார்.
பழங்குடியினர் நலத்துறையில் நூறு விழுக்காடு தடுப்பூசி போடச்செய்ய வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் தமது அந்த உத்தரவுக்கு பிறகு 95 விழுக்காடு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்றும் மஸ்ராம் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஊழியர்களின் ஊதியத்தை தாம் முடக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்தியாவில் நேற்று முன்தினம் 2.83 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

