நெல்லூர்: ஆந்திராவில் போனஜி ஆனந்தய்யா என்பவர் கொரோனா நோயாளிகளுக்கு மூலிகை மருந்துகளை வழங்கி வருகிறார்.
இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனால் அவர் வசிக்கும் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணப்பட்டிணம் முத்துக்கூறு கிராமத்தில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
அக்கம்பக்கத்தில் இருந்து 500, 1,000 என்று கூட்டம் கூடியது. ஆனால் தற்போது அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் படையெடுத்துள்ளதால் ஆயிரக்கணக்கானவர்கள் அவரது வீட்டின் முன்பு தவம் கிடக்கின்றனர்.
இவர் தரும் கொரோனா மருந்து, கண்ணில் போடக்கூடிய சொட்டு மருந்தாகும். இந்தச் சொட்டு மருந்து தேன், வால் மிளகுடன் ஒரு குறிப்பிட்ட வகையான கத்தரிக்காயின் கூழ் ஆகியவற்றால் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது. நெல்லூரில் ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவுக்கு இணங்க ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்த ஆந்திர அரசின் மருத்துவக் குழுவினர், இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்று கூறி உள்ளனர்.
இருந்தாலும் கொரோனா நோயாளிகளை அவரது மருந்து குணப்படுத்துமா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்படு கிறது. இந்த நிலையில் மக்களி டையே கொவிட்-19 தொற்று பரவும் என்ப தால் அவரது மருந்து விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் ஆனந்தய்யா மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அதில், "அரசு அதிகாரிகள் என்னை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று கொரோனா மருந்து சூத்திரத்தை கேட்டு மிரட்டுகின்றனர். அந்த மருந்தை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறேன். ஆய்வு செய்வதாகக் கூறி அரசு தாமதப்படுத்துகிறது. விரைவாக ஆய்வு செய்து முடிவை வெளியிட்டால் முடிந்த அளவு மருந்து தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்குவேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

