அமராவதி: ஆந்திர மாநிலப் பிரிவினைக்குப் பிறகு அங்கு சிறந்த மருத்துவமனைகள் அதிகமாக இல்லை என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திர மக்கள் சிகிச்சைக்காக தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா என பிற மாநிலங்களுக்குச் செல்லவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது என தனியார் மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட பிறகு அவர் குறிப்பிட்டார்.
ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்க முன்வருவோருக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
" மூன்று ஆண்டுகளுக்குள் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன்வந்தால் ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும். மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்," என்றார் முதல்வர் ஜெகன்மோகன்.
ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள், 3 மாநகராட்சிகளில் 16 இடங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் ஒவ்வோர் இடத்திலும் 50 ஏக்கர் வரை இலவச நிலம் மருத்துவமனைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
"ஒவ்வொரு மருத்துவ முனையத்திலும் 6 முதல் 10 மருத்துவமனைகள் வரை வர வாய்ப்புள்ளது. இது தவிர மாநிலம் முழுவதும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் ஆந்திர மக்கள் சிகிச்சைக்காக வேறு எங்கும் செல்ல வேண்டியது இல்லை," என்றார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

