மும்பையில் இரவு நேரத்தில் சோகம்
மும்பை: கட்டட விபத்து ஒன்றில் ஏழு பேர் பலியாகி இருப்பது மும்பை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
மும்பையை அடுத்துள்ள தானே மாவட்டத்தின் உல்லாஸ் நகரில் இருந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் நிறைய பேர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் அந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பலர் உயிருக்குப் போராடுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அதிகாலை வரை நீடித்த மீட்புப் பணியின்போது பலர் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த ஏழு பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது என்றும் பலியானவர்களில் ஒரு சிறுவன், மூன்று பெண்கள் அடங்குவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் பலியான அனைவரும் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே இடிந்து விழுந்த கட்டடம் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. எனினும் கட்டடம் முறையாக பராமரிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தை மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.