புதுடெல்லி: அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதே கொரோனா நெருக்கடி காலத்தில் சரியான நடவடிக்கையாக இருக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடும் விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபட இது சரியான நேரமல்ல என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய அரசுதான் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
நேற்று முன்தினம் டெல்லியில் இயங்கிவரும் தடுப்பூசி மையத்தை அவர் பார்வையிட்டார். அப்போது தடுப்பூசி விவகாரத்தில் தாம் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.
"தடுப்பூசி விவகாரத்தில் எங்கே அரசியல் செய்யப்படுகிறது? மக்களுக்குத் தடுப்பூசி தேவை. அது எங்கே கிடைக்கும் என்று மத்திய அரசுதான் கூறவேண்டும். மேலும், தடுப்பூசிகளை மத்திய அரசுதான் மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
"அவற்றைப் பெற்று மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் நாங்கள் வழங்குவோம். கொரோனா நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி போடுவது ஒன்றே தீர்வு," என்றார் முதல்வர் கெஜ்ரிவால்.
டெல்லியில் புதிதாக தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் 900ஆக குறைந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், பாதிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்தபடி இருந்தால் தலைநகரில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றார்.
டெல்லியில் இதுவரை 450 பேருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

