ஆந்திரா ஆதரவு; தெலுங்கானா, கர்நாடகா முட்டுக்கட்டை
புதுடெல்லி: தமிழ் நாட்டின் நீண்ட நாள் கனவான கோதாவரி நதியை காவிரியுடன் இணைக்கும் திட்டத்துக்கு தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு (என்டபிள்யுடிஏ) ஒப்புதல் வழங்கி, இதற்கான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.
சுரங்கப்பாதையுடன் மொத்தம் 1,211 கி.மீ., தூரம் வரை கால்வாய் தோண்டி இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 2020-21 வருவாய் ஆண்டில் ரூ.85,962 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு தமிழகத்துக்கு உதவ ஆந்திர மாநிலம் முன்வந்துள்ள நிலையில், தெலுங்கானாவும் கர்நாடகாவும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.
இழுபறியாக இருந்து வந்த கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் குடிநீர் தேவை பூர்த்தியாவதுடன் வேளாண்மை மற்றும் தொழில் துறைகள் வளர்ச்சி அடைய உள்ளன. இதன்படி, தெலுங்கானா மாநிலம், ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டம், மகாதேவபுரம் மண்டலத்தில் உள்ள ஈச்சம்பள்ளியில் உள்ள கோதாவரி நதி மீது அணைக்கட்டு கட்டி, தமிழகத்தின் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள கல்லணை வரை உள்ள மொத்தம் 1,211 கி.மீ., தூரம் வரை இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 19 கி.மீ., தூரம் சுரங்கப் பாதையும் அடங்கும். வழியில் 1,088 சைபர் கால்வாய்கள் கட்டப்பட உள்ளன.
இத் திட்டம் ஈச்சம்பள்ளியில் இருந்து தெலுங்கானா மாநிலத்தின் நாகார்ஜுன சாகர் அணைக்கட்டு வரை நதிநீரை திசை திருப்ப மூன்று இடங்களில் தூக்குவிசை முறை நிர்மாணிக்கப்பட உள்ளது. இதைக் கட்ட 3,845 மில்லியன் யூனிட் மின்சாரம் அவசியம். மின்சாரச் செலவு ரூ.769 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 366 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யக்கூடிய நீர் மின் உற்பத்தி மையங்கள் கட்டப்படுகின்றன.
ஈச்சம்பள்ளி அருகே கட்டப்படும் அணைக்கட்டால், அப்பகுதியில் உள்ள 9,306 ஹெக்டேர் நிலம் தாழ்வான பகுதியாக மாற்றப்படும். இதனால், தண்ணீர் சூழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடம் நதிக்கு சொந்தமானது என்றும், இவை சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.