மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஏன் 18-44 வயது பிரிவினருக்குத் தடுப்பூசி வாங்கி செலுத்தக்கூடாதென்றும், தடுப்பூசி விநியோகம் தொடர்பான அனைத்துத் தரவுகளையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போட வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசின் திட்டமிடல் குறைபாடே காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் அண்மைய காலமாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தடுப்பூசிக்காக மட்டும் 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தார்.
இந்நிலையில், தடுப்பூசி விநியோகம் பற்றிய அனைத்துத் தரவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தடுப்பூசி விநியோகம் மற்றும் கொரோனா பரவல் தொடர்பாகத் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு முன்னதாக, நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது களநிலவரங்களை ஆராய்ந்து விட்டுப் பேசிய நீதிபதிகள் மத்திய அரசுக்கு ஒரு சில உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 'கோவின்' என்ற செயலி மூலம் பதிவு செய்வது என்பது அனைவருக்கும் சாத்தியமா? என்பதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
'புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசிக் கொள்கை' குறித்து 2 வாரங்களுக்குள் எழுத்துபூர்வ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கள நிலவரங்களை முழுமையாக ஆராய்ந்து கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேலும் சில உத்தரவுகளை மத்திய அரசுக்குப் பிறப்பித்தனர். வழக்கு விசாரணை இம்மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.