ஒரு குவளை தண்ணீர் குடித்ததற்காக உடற்குறையுடன் இருந்த ஆடவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்தது.
பெகுசராய் மாவட்டம், பதேபுரா எனும் சிற்றூரைச் சேர்ந்த சோட்டா லால் சகானி, 50, கடந்த வெள்ளிக்கிழமையன்று தம் ஊருக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்கச் சென்றார்.
திரும்பி வந்தபோது தாகமாக இருந்ததால், தினேஷ் சகானி என்பவரது வீட்டின்முன் வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து ஒரு குவளை தண்ணீரை முகந்து அருந்தினார்.
"அதைக் கண்ட தினேஷும் அவரின் மகன் தீபக்கும் கழிகளைக் கொண்டு சோட்டே லாலைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். அதன்பின் சக கிராமவாசிகளின் துணையுடன் சோட்டே லால் ஒருவாறு தமது வீட்டை அடைந்தார்," என்று போலிஸ் தெரிவித்தது.
சோட்டே லாலின் உடல்நிலை மோசமானதை அடுத்து, பெகுசராயில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும், அவரது உடல்நிலை மேலும் மோசமாகவே, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆயினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.
சோட்டே லால் ஏழை என்பதால் அவரது மருத்துவச் செலவுகளையும் இறுதிச் சடங்குச் செலவுகளையும் சக கிராமவாசிகளே பார்த்துக்கொண்டனர். தினேஷ் கைது செய்யப்பட்டுவிட்டார். தலைமறைவாக இருக்கும் தீபக்கை போலிஸ் தேடி வருகிறது.

