கோல்கத்தா: பல லட்ச ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருள்களைத் திருடியதாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீதும் அவரின் சகோதரர் மீதும் போலிசில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பூர்ப மேதினிப்பூர் மாவட்டம், காந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து அவர்கள் அப்பொருள்களைக் களவாடிச் சென்றதாக நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் போலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்கு பதியப்பட்டது.
உதவிப் பொருள்களைப் பதுக்குவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இப்போது அதே புகாரில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சிக்கியுள்ளார்.
தங்களது பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய ஆயுதப் படையினரைக் கொண்டு பாஜக தலைவர்கள் உதவிப் பொருள்களைக் களவாடியதாக போலிஸ் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தம் மீதான புகாருக்கு சுவேந்து அதிகாரி இன்னும் பதில் அளிக்கவில்லை.
கடந்த நவம்பர் வரை திரிணாமூல் கட்சி சார்பில் மத்திய அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர், தம்மை எதிர்த்துக் களம் கண்ட முதல்வர் மம்தா பானர்ஜியை 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.