மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் எட்டு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்து விட்டதாக மும்பை போலிசார் தெரிவித்தனர்.
மும்பையில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை நீடித்து வருகிறது.
இந்நிலையில் மும்பை மாநகரின் மேற்குப் பகுதியான மாலட்டில் நேற்று குடியிருப்புப் பகுதி ஒன்றில் 2 மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கட்டட இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பலியாகி விட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் 11 பேரின் உடல்களை மீட்டனர். துரிதகதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த 8 பேரை உயிருடன் மீட்க முடிந்தது.
படுகாயமடைந்துள்ள அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்தது இரண்டு மாடிக் குடியிருப்புக் கட்டடம் என்பதால் இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து தீவிர மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. விபத்து பகுதியை மகாராஷ்டிர மாநில அமைச்சர் அஸ்லாம் ஷைக் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மும்பையில் தீவிரமடையும்
பருவமழை
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
நேற்று முன்தினம் பெய்த இடைவிடாத மழை காரணமாக மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இரு சக்கர வாகனமோட்டிகள் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல முடியாமல் தத்தளித்தனர். பல வாகனங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் அவை பழுதடைந்து சாலையின் நடுவே நின்றன.
இந்த வாகனங்கள் கிரேன்கள் மூலம் அகற்றப்பட்டதாகத் தெரிகிறது. மும்பை மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.