லக்னோ: உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா திடீரென பாஜகவில் இணைந்துள்ளார்.
இதனால் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாக கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் ஜிதின் பிரசாதா. கடந்த ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில்சிபல் உள்ளிட்ட 23 பேர் இணைந்து கட்சி மேலிடத்துக்குக் கடிதம் எழுதினர். அவர்களில் ஜித்தின் பிரசாதாவும் ஒருவர்.
காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது அக் கடிதம். பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிய ஜிதேந்திர பிரசாத்தின் மகனான ஜிதின் பிரசாதா, ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராவார்.
இந்நிலையில் கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதிய பிறகும் கட்சி அமைப்பில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாததால் தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார் ஜிதின். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜிதின் கட்சி மாறியிருப்பது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சில தலைவர்கள் மீண்டும் முதல்வர் மம்தா கட்சியில் இணைய முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

