அமராவதி: ஆந்திராவில் கறுப்புப் பூஞ்சை நோயால் 1,955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில மருத்துவ, சுகாதார முதன்மைச் செயலாளர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கறுப்புப் பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவில் இதுவரை 114 பேர் பூஞ்சை நோய்க்குப் பலியாகி விட்டனர். தற்போது 1,301 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மகாராஷ்டிராவைச் சேர்ந்த நவீன்பால் என்பவர் கறுப்புப் பூஞ்சை நோயிலிருந்து சிகிச்சை பெற்று மீள ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்.
46 வயதான இவர்தான் மகாராஷ்டிராவில் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி ஆவார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார் நவீன்பால். அதன்பிறகு திடீரென பூஞ்சை நோய் இவரை தாக்கியது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறாததால் நோயின் கடுமை அதிகரித்து, தமது இரு கண்களையும் பறிகொடுத்ததுடன் சிகிச்சை செலவாக ஒன்றரை கோடி ரூபாய் அளவு செலவும் செய்துள்ளார் நவீன் பால். அவரது முகத்தில் இதுவரை 13 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இவரது மனைவி ரயில்வே ஊழியர் என்பதால் அத்துறை ஒரு கோடி ரூபாயை சிகிச்சைக்காக அளித்துள்ளது.
மீதிப் பணத்தை நவீன்பால் குடும்பத்தார் செலவிட்டுள்ளனர்.