பீகாரில் தொற்று, மரண எண்ணிக்கையை மறு தணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 6,148 பேர் கொரோனா கிருமித் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பதிவான அன்றாட மரண எண்ணிக்கையில் ஆக அதிகமாகும்.
அண்மைய சில தினங்களாக நாடு முழுவதும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகிறது.
நேற்று காலை வரையிலான நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,148 பேர் மாண்டுவிட்டனர். இதற்கு முன்பு உலகளவில் ஒரேநாளில் பதிவான அன்றாட மரணச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒரேநாளில் 5,527 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 360,000 ஆகக் கூடியுள்ளது. இதன்மூலம் உலக அளவிலான கொரோனா மரணப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
கடந்த புதன்கிழமையன்று பீகாரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் கிருமித்தொற்றால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சு நாடு முழுவதும் 2,197 பேர் உயிரிழந்ததாக அறிவித்தது
ஆனால், பீகார் மாநிலத்தில் மரண எண்ணிக்கை தொடர்பில் மறுகணக்கீடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அம்மாநிலத்தில் மட்டும் 3,951 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தத் தகவல் மத்திய சுகாதார அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாடு தழுவிய அளவிலான அன்றாட மரண எண்ணிக்கையும் அதிகரித்தது.
பீகாரில் கொரோனா பாதிப்பால் வீட்டிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இறந்து போகிறவர்கள் குறித்து முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்ற புகார் நிலவி வருகிறது.
புதிய தொற்று, மரண எண்ணிக்கையை அம்மாநில அரசு மறைப்பதாக பல்வேறு தரப்பினரும் சாடியுள்ளனர்.
இதையடுத்து பீகார் உயர்நீதிமன்றம் எண்ணிக்கைகளை மறுதணிக்கை செய்யவேண்டும் என உத்தரவிட்டது. அதன்பிறகே நேற்று முன்தினம் முதலில் அறிவிக்கப்பட்ட மரண எண்ணிக்கை பின்னர் மாற்றப்பட்டது.
மேலும் பல மாநிலங்களில் இதேபோல் தவறான எண்ணிக்கைகள் வெளியிடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
பிரேஸில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மரண விகிதம் இந்தியாவைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் புதிதாக சுமார் 94 ஆயிரம் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.