இஸ்லாமாபாத்: கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களின் கைபேசி சேவை முடக்கப்படும் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் அறிவித்துள்ளது.
பல வார கடும் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் கொரோனா மூன்றாவது அலை மட்டுப்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும், அங்கு அதிக மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்து வருகிறது.
"தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் பெரிதும் தயங்குவதால் கைபேசி சேவையை முடக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது," என்றார் பஞ்சாப் ஆரம்ப சுகாதாரத் துறை பேச்சாளர் ஹம்மத் ரஸா.
மொத்தம் 220 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானில் இதுவரை 10.5 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பெரும்பாலும் சீனாவிலிருந்தே தடுப்பூசிகள் பெறப்படுகின்றன.
தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த கவலைகளுடன், மலட்டுத்தன்மை ஏற்படும் என்றும் ஈராண்டுகளுக்குள் உயிரிழக்க நேரிடும் என்றும் வதந்தி பரப்பப்படுவதால் அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பலரும் தயங்குவதாகச் சொல்லப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு ஜூலை மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாது என்று ஏற்கெனவே சிந்து மாநிலம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.