ஜகார்த்தா: மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள ஆயிரக்கணக்கான இந்தோனீசியர்களை வரவேற்க அந்நாடு ஆயத்தமாகி வருகிறது.
இந்தோனீசியா, மியன்மார், நேப்பாளம், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மில்லியன்கணக்கான ஊழியர்கள் முறையான ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் பெரும்பாலும் தோட்டம், கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் வேலைசெய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இப்போதைய கொவிட்-19 பரவல் சூழலில் தனது பிடியை இறுக்கியுள்ள மலேசியா, அவ்வப்போது அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு, முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கிஇருக்கும் வெளிநாட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை நாடுகடத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்து, எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரை முதலில் திருப்பியனுப்பும்படி இந்தோனீசியா கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த வகையில், தடுப்பு மையங்களில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 7,200 பேரை மலேசியா திருப்பியனுப்ப இருப்பதாக இந்தோனீசிய மனிதவள மேம்பாட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் ஃபெமி இகா கார்த்திகா புத்ரி தெரிவித்துள்ளார்.