புதுடெல்லி: இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இப்போதைய அமைச்சரவையில் 60 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை 79ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கடந்த சில நாள்களாகப் பல்வேறு அமைச்சுகளின் பணிகளை மறுஆய்வு செய்து வருவதாக 'லைவ் இந்துஸ்தான்' செய்தி கூறுகிறது. அமைச்சரவை மாற்றம் அல்லது விரிவாக்கத்திற்குமுன் இத்தகைய மறுஆய்வு இடம்பெறுவது வழக்கம்.
இதுவரை 24 அமைச்சர்களின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் எஞ்சிய அமைச்சர்கள் தொடர்பான மறுஆய்வு இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், முன்னாள் பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, ஜோதிராதித்ய சிந்தியா எம்.பி. ஆகியோர்க்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.