நவீன வசதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவுடன் அமைக்க மத்திய அரசு முடிவு
புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய ஐம்பது தற்காலிக துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு பரவி உள்ளது. இந்நிலையில் மருத்துவ வசதிகளைப் பொறுத்தவரையில் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது.
இந்த இடைவெளியைப் போக்கும் வகையில் இந்தப் புதிய தற்காலிக துணை மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த மருத்துவமனைகளை அமைக்க மூன்று வாரங்கள் தேவைப்படும் என்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் இடம் ஒதுக்கப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இம்மருத்துவமனைகள் முழுமையான செயல்பாட்டுக்கு வர ஆறு முதல் ஏழு வாரங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார். முதற்கட்டமாக மாநில அரசுக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அதை எதிர்கொள்ளும் விதமாக மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
மின்வசதி, தண்ணீர் விநியோகம், உயிர்வாயு குழாய் அமைப்பு ஆகிய வசதிகளைக் கொண்டுள்ள எந்த ஓர் அரசு மருத்துவமனையும் இந்த தற்காலிக துணை மருத்துவமனைகளை அமைக்க முடியும் என்று அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் உறுப்பினரான ஆதிதி லீலே தெரிவித்துள்ளார்.
இந்தத் துணை மருத்துவமனைகள் தற்போது முழுவீச்சில் இயங்கி வரும் பெரிய மருத்துவமனைகளின் வளாகத்தை ஒட்டி நிறுவப்படுகின்றன.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் என்றும் துணை மருத்துவமனைகள் அமைப்பதற்கான தேவை உள்ளதா என்பதைக் கண்டறியுமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் நகர், மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி, புனே, ஜால்னா நகரங்களில் 100 படுக்கைகள் கொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.
பஞ்சாப், சட்டீஸ்கர் மாநிலங்களில் 20, 50 படுக்கைகள் கொண்ட துணை மருத்துவமனைகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனிமேலும் துணை மருத்துவமனைகள் தேவை இல்லை எனக் கருதினால், அவற்றை அகற்றிவிட இயலும். மேலும் ஒரே வாரத்தில் வேறோர் இடத்தில் அம்மருத்துவமனையை மீண்டும் நிறுவ முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

