மும்பை: மகாராஷ்டிராவில் கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பால் 7,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு இதுவரை 644 பேர் பலியாகிவிட்டதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்றை அடுத்து இப்போது கறுப்புப் பூஞ்சை நோய் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த நோய்த்தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்,தெலுங்கானா, ஒடிசா, குஜராத், பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பூஞ்சை நோயானது இந்தியத் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக உள்ளது.
மகாராஷ்டிராவில் இந்நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 2,212 பேர் குணமடைந்துள்ளனர். 4,463 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். புனே, அவுரங்காபாத், நாக்பூர், நாசிக் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கறுப்புப் பூஞ்சை நோய்த் தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களுக்கு அந்நோய்க்குச் சிகிச்சை அளிக்க உதவும் மருந்துகளை போதுமான அளவில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.

