அகமதாபாத்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் கட்சியின் புது அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் கட்சியினர் மத்தியில் பேசியபோது, குஜராத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என்றார்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மக்களுக்கு தம்மை யாரென்றே தெரியாது என்றும் பின்னர் தேர்தல் மூலம் அங்கு நிலைமையை மக்கள் மாற்றி அமைத்தனர் என்றும் கெஜ்ரிவால் நினைவுகூர்ந்தார்.
"அதேபோல் குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஆறு கோடி மக்களும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கான முகத்தை தேர்வு செய்வார்கள்.
"ஒரு காலத்தில் தலைநகர் டெல்லியை ஆக்கிரமித்து இருந்தது போன்று தற்போது குஜராத் மாநிலத்தையும் இரண்டு கட்சிகள் தங்கள் வசமாக வைத்துக்கொண்டு மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன," என்றார் முதல்வர் கெஜ்ரிவால்.
கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜ ஆட்சி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சியான காங்கிரசோ பாஜவின் சட்டைப் பையில் உள்ளது என விமர்சித்தார்.
அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, 120 உறுப்பினர்களைக் கொண்ட சூரத் மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களைக் கைப்பற்றியது.
இதன் மூலம் காங்கிரசுக்கு இணையான செல்வாக்கு இருப்பதை நிரூபித்துள்ளதாக ஆம் ஆத்மி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் குஜராத் தேர்தலில் தனித்து களமிறங்கப் போவதை நாசூக்காகத் தெரிவித்துள்ளார் முதல்வர் கெஜ்ரிவால்.
தேர்தல் பணிகளையும் ஆம் ஆத்மி கட்சி இப்போதே தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.

