புதுவை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு
புதுவை: புதுவை சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் போட்டியின்றித் தேர்வானார். சபாநாயகர் தேர்தலில் பாஜக வேட்பாளரை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. எனினும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கவில்லை. பாஜக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தாஜ்மகால், செங்கோட்டை இன்று திறப்பு
புதுடெல்லி: கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தாஜ்மகால், செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் இன்று முதல் பொது மக்களுக்காக திறக்கப்பட உள்ளன. மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் சுமார் 3,700 சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
திருவனந்தபுரம்: அரபிக்கடலில் உருவான புயல் அறிகுறிகளின் காரணமாக கேரளாவின் 11 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய நீர் நிலைகள், அணைகள் நிரம்பியுள்ளன. 18ஆம் தேதியன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இன்று மூன்று மாவட்டங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

