அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு காரில் சூரத்திலிருந்து பாவ்நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். இந்திரனாஜ் என்ற கிராமம் அருகே கார் சென்றபோது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் அது மோதியது.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள், ஏழு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மாவட்ட ஆட்சியரிடம் விபத்து குறித்து பேசியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவ அவர் உறுதி கூறியதாகவும் தகவல்கள் கூறின.
விபத்துக்கான காரணம் பற்றி புலன்விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.