புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
நாட்டில் 9வது நாளாக நேற்று பாதிப்பு மேலும் குறைந்தது. 70 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது.
புதிதாக 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும் 2,542 பேர் பலியானதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன. ஒரே நாளில் குணமடைந்தவர்கள் 107,628 பேர்.
மொத்த கிருமி பாதிப்பு எண்ணிக்கை 2.96 கோடி என்றும் மொத்த மரண எண்ணிக்கை 379,573 என்றும் தகவல்கள் தெரிவித்தன. கொரோனா பாதிப்பு காரணமாக இப்போது 865,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26.19 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அறிவியல்பூர்வ ஆதாரத்தின் அடிப்படையிலேயே கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி அதிகரிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் ஊசிக்கும் இரண்டாம் ஊசிக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது.
இரண்டாவது ஊசி 12-16 வாரங் களுக்குள் வழங்கப்பட்டால் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கோவிஷீல்டு தடுப்பூசிக்கான நெறிமுறை மாற்றப்பட்டு மக்களுக்குப் போடப்பட்டு வருகிறது.
ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளியைக் குறைத்தால் பலன் அதிகமாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக அண்மையில் செய்திகள் வெளியாயின.
இதனால் கோவிஷீல்டு முதல் ஊசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு 2-வது ஊசி போடுவதில் குழப்பம் தலை தூக்கியது.
இதையடுத்து மத்திய அரசு விளக்கம் அளித்தது.
கோவிஷீல்டின் இரண்டு ஊசி களுக்கு இடையில் இடைவெளியை அதிகரிப்பது தொடர்பான முடிவு அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அரசு கூறியது.

