மும்பை: அயோத்தி கோவில் அறக்கட்டளையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததை அடுத்து சிவசேனா கட்சிக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்காக நிலம் வாங்கப்பட்டது தொடர்பான சர்ச்சை காரணமாக இரு கட்சியினரும் நேற்று முன்தினம் மோதிக்கொண்டனர். இதனால் மகாராஷ்டிராவின் தாதர் பகுதியில் பதற்றம் நிலவியது.
அயோத்தி கோவில் அறக்கட்டளையால் வாங்கப்பட்ட நிலம் தொடர்பாக அண்மையில் சர்ச்சைக்குரிய சில தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கம் வெளியானது. அதில் அயோத்தி கோவில் அறக்கட்டளை குறித்துக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இதனால் பாஜகவினர் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தாதர் நகரில் உள்ள சிவசேனாவின் கட்சி அலுவலகம் நோக்கி பாஜகவின் இளையர் அணியினர் ஊர்வலமாகச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த சிவசேனா கட்சித் தொண்டர்களும் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அது பின்னர் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதை அடுத்து போலிசார் எச்சரிக்கை விடுத்தனர்.
அதன்பிறகு பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

