லக்னோ: கங்கை நதியில் ஆடி ஆடி மிதந்து வந்த மரப்பெட்டியில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கங்கை நதியில் படகுப் போக்கு வரத்து செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள காஜிபுர் பகுதியில் படகோட்டியாகப் பணியாற்றி வரும் குல்லு சௌத்ரி, தனது பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது நதியில் ஒரு மரப்பெட்டி மிதந்து வருவதைப் பார்த்தார்.
அதை மீட்டு, திறந்து பார்த்த போது அதனுள் ஒரு பெண் குழந்தை இருந்தது. அதோடு குழந்தையின் ஜாதகம், துர்க்கையம்மனின் புகைப்படங்களும் இருந்தன. குழந்தையின் பெயர், 'கங்கை மகள்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்துச்சென்ற சௌத்ரி, அதை தானே வளர்க்கப் போவதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழந்தையை மீட்டு மாநில அரசின் ஆஷா ஜோதி மையத்தில் சேர்த்தனர்.
கங்கை தாய் எனக்குப் பரிசாக அளித்த குழந்தையை நானே என் உயிரினும் மேலாக வளர்ப்பேன்.
படகோட்டி குல்லு சௌத்ரி